உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை ஓரிரு நாள்களில் முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் கே.என்.நேரு

மாநகராட்சி, நகராட்சி பகுதிகளின் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை ஒரு சில நாள்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார். 
சீர்மிகு திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோக குழாய்களை புனரமைக்கும் பணி ஆகியவற்றை  தொடக்கி வைத்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு.
சீர்மிகு திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோக குழாய்களை புனரமைக்கும் பணி ஆகியவற்றை  தொடக்கி வைத்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு.

திருச்சி: மாநகராட்சி, நகராட்சி பகுதிகளின் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை ஒரு சில நாள்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார். 

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நூறு நாள்களை கடந்துள்ள நிலையில், நூறு நாள்களில் திமுக அரசு செய்த சாதனைகளை விளக்கி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி, ஆழ்வார்தோப்பு குழுமிக்கரை சாலையில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை, திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட அண்ணாநகர், தில்லைநகர், உறையூர், மரக்கடை, சிந்தாமணி, மலைக்கோட்டை ஆகிய பகுதிகளில் சீர்மிகு திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோக குழாய்களை புனரமைக்கும் பணி ஆகியவற்றை  நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடக்கி வைத்தார்.

மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் சிறப்பு புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ரூ.54.27 கோடி செலவில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் திருச்சி மாநகராட்சி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில், 103.425 கி.மீ நீளத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட உள்ளது. 4 இடங்களில் மேல்நில்நிலை நீர்தேக்கத் தொட்டியும், 2 இடங்களில் கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டியும் அமைக்கப்பட உள்ளது.

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடைப்பெற்று வருகிறது.

திருச்சியில் சிந்தாமணி-மாம்பழச்சாலை இணைக்கும் காவேரி பாலம் வலுவிழந்து உள்ளது. அந்த பாலத்திற்கு அருகிலேயே ரூ.80 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய காவேரி பாலம் கட்டப்படும்.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 60 அடி அகலத்தில் திருச்சி நீதிமன்றம் முதல் அல்லித்துறை வரை சாலை விரிவாக்கமும் புதிய சாலைகள் அமைக்கப்படும். இதுபோல், உறையூர் முதல் வயலூர் வரை நேரடி சாலை அமைக்கப்படும். 

திருச்சியில் அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகில் மொத்த மற்றும் சில்லறை மார்கெட் அமைக்கப்படும்.திருச்சியில் செயல்படும் வேறு எந்த சந்தைகளும் இடமாற்றம் செய்யப்படாது.

மாநகராட்சி விரிவாக்கத்தின் போது மாநகராட்சியோடு இணைக்கப்படும் கிராம பஞ்சாயத்துக்களின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பதவிக்காலம் முடியும் வரை அப்பதவிகளில் நீடிப்பார்கள். அவர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின்  நேரடி கண்காணிப்பில் செயல்படுவார்கள். மாநகராட்சியோடு இணைக்கப்படும் கிராம பஞ்சாயத்துக்கள் நீங்கலாக தேர்தல் நடத்தப்படும்.

மாநகராட்சி, நகராட்சி பகுதிகளின் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நடைப்பெற்று வருகிறது.தேர்தலை எப்பொழுது நடத்தலாம் என ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.அந்த தேர்தலுக்கான தேதியை ஒரு சில நாள்களில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்றார். 

இந்த நிகழ்ச்சிகளின் போது மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் சமது, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜுபுர் ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com