சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே கடந்த வாரம் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த அடையாளம் தெரியாத வடமாநிலத்தைச் சேர்ந்தவரின் சடலத்தை சங்ககிரி காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் உரிய சடங்குகளுடன் நல்லடக்கம் செய்தனர். அவர்களின் செயல்களை சங்ககிரி மக்கள் பாராட்டினர்.
சங்ககிரி அருகே உள்ள ஊஞ்சக்கொரை பகுதியில் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வடமாநிலத்தைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் பலத்த காயமடைந்துள்ளார். காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே இறந்துவிட்டார்.
இது குறித்து சங்ககிரி காவல்துறை ஆய்வாளர் ஆர்.தேவி வழக்குப் பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வந்தார். அதனையடுத்து காவலர்கள் பல்வேறு காவல்நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்தும் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், ஒரு வாரமாக யாரும் உயிரிழந்த நபரை தேடி வராததால் சடலத்தை நல்லடக்கம் செய்ய முடிவு செய்தனர். அதனையடுத்து சங்ககிரி காவல் ஆய்வாளர் தலைமையில் காவலர் கே.கந்தசாமி உள்ளிட்ட காவலர்கள், தனியார் ஆம்புலன்ஸ் நிர்வாகி இளங்கோ, அவரிடம் பணிபுரியும் தொழிலாளகள் மணி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் ஆகியோர் இணைந்து இந்து சமய முறைப்படி இறந்தவருக்கு செய்யும் அனைத்து சடங்குகளையும் செய்து சங்ககிரியில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர். காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்களின் செயல்களை மக்கள் பாராட்டினர்.