கம்பம்: தேக்கடி ஏரியில் படகு சவாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் புலிகள் நடமாட்டத்தைப் பார்த்து உற்சாகம் அடைந்தனர்.
முல்லைப் பெரியாறு அணையில் உள்ள தேக்கடி ஏரியில் கேரள மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகு சவாரி தொடங்கியுள்ளது.
சனிக்கிழமை காலை 9 மணிக்கு படகுச்சவாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் எடப்பாலம் விடுதி அருகே புலி ஒன்று படுத்திருப்பதைப் பார்த்து உற்சாகம் அடைந்தனர், இரண்டாவது முறையாக 11 மணி படகில் சென்ற சுற்றுலாப் பயணிகள் புலி மற்றும் அதன் குட்டியும் நடந்து சென்றதைப் பார்த்து உற்சாகம் அடைந்தனர். மூன்றாவதாக 1 மணி படகில் சென்ற சுற்றுலாப் பயணிகள் மற்றுமொரு புலியைப் பார்த்து உற்சாகம் அடைந்தனர்.
இதுபற்றி கேரள மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர் ஒருவர் கூறும்போது, பொதுவாக படகுச்சவாரி செல்பவர்களுக்கு யானை, காட்டெருமை, மான்கள் போன்றவை கண்ணில் தென்படும். சனிக்கிழமை மூன்று புலிகள், மற்றும் ஒரு குட்டிப்புலி நடமாட்டத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.