சங்ககிரி: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த நாட்டாம்பாளையத்தில் உள்ள அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ கண்ணபிரான் சுவாமிக்கு திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நாட்டாம்பாளையத்தில் உள்ள அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ கண்ணபிரான் சுவாமிக்கு கிருஷ்ணஜெயந்தியையொட்டி சங்ககிரி வட்டார யாதவா சங்கத்தின் சார்பில் புனித நீர் எடுத்து வந்து பால், தயிர், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன.
கிருஷ்ணஜெயந்தியையொட்டி கோயில் வளாகம் முழுவதும் அரிசி மாவினால் குழந்தைகள் கால் பதியப்பட்டு கிருஷ்ணர் குறித்த பக்தி பாடல்களை பக்தர்கள் பாடினர்.
அதனையடுத்து உற்சவ மூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு கோயில் வளாகத்தை சப்பாரத்தில் வைத்து சுற்றி வந்தனர். சிறிய குழந்தைகள் கண்ணன் வேடமிட்டு நடந்து சென்றனர்.
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச் சென்றனர். பின்னர் விழாக்குழுவினர் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.