காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள 13வது காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில், மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பான விவாதம் செய்யக்கூடாது என, புதுவை சட்டப்பேரவையில் திங்கள் கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மூன்றாவது நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவாக கர்நாடக மாநிலம் காவிரி ஆற்றில் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு எதிரான ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தனர்.
முதல்வர் ரங்கசாமி கொண்டுவந்த தீர்மானத்தில், காவிரி குறுக்கே கர்நாடக மாநிலம் மேக்கே தாட்டுவில் அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி, புதுவை அரசு சார்பில் ஏற்கனவே பிரதமருக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்பி எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளோம்.
இதன் தொடர்ச்சியாக காவிரி நீர் பிரச்னை குறித்து 13-வது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. அதில் மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக விவாதிக்க கூடாது என்று, புதுச்சேரி சட்டப்பேரவையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் ரங்கசாமி கொண்டுவந்த இந்த தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.