டோக்கியோ பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் மாரியப்பன் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இதையடுத்து தலைவர்கள் பலர் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில்,
டோக்கியோ பாராலிம்பிக்சில் இந்தியா தொடர் வெற்றிகளைக் குவித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து இரண்டாவது முறையாக உயரம் தாண்டுதலில் பாராலிம்பிக் பதக்கம் வென்றுள்ள நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர் மாரியப்பன் தங்கவேலு,
உயரம் தாண்டுதல் மற்றும் துப்பாக்கிச் சுடுதலில் முறையே வெண்கலம் வென்றுள்ள சரத் குமார் மற்றும் சிங்ராஜ் அதானா ஆகிய மூவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன், கடந்த முறை ரியோ பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்றார். இதையடுத்து பாராலிம்பிக்ஸில் தொடர்ந்து இருமுறை பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.