கோவை: 21 மாத இடைவெளிக்குப் பிறகு கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரளத்துக்கு பேருந்து சேவை தொடங்கி உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கரோனா நோய்த்தொற்று காரணமாக கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரளம் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. கேரளத்தில் சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், இரு மாநிலங்கள் இடையிலான பேருந்து போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டு என கேரள போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ, தமிழக போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடந்த 6 ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
இதனடிப்படையில் தமிழக அரசு நேற்று தமிழகம் -கேரளம் இடையேயான பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்தகி உத்தரவு பிறப்பித்தது.
இதையும் படிக்க | அமெரிக்க நிறுவனங்களுக்குத் தலைமை வகிக்கும் 8 இந்தியா்கள்!
இதனையடுத்து புதன்கிழமை காலை முதல் கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளம் மாநிலம் பாலக்காடு, திருச்சூர், கொச்சி, மூணாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேபோல கேரளம் மாநில பேருந்துகளும் உக்கடம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றன. கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ரயில் சேவை மட்டுமே கேரளம் மாநிலத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிக்க | வங்கிகளில் உரிமை கோரப்படாமல் இருக்கும் தொகை ரூ.26,697 கோடி
கோவையில் இருந்து கேரளம் மாநிலத்துக்கு பேருந்து பயணம் மேற்கொள்பவர்கள் தமிழக அரசின் கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிகளைப் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.