மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பாம்புபிடிக்கும் தொழில் செய்யும் காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் அங்குள்ளவர்கள் இரவில் பள்ளிக்கூடத்திலும் பகலில் வீதிகளிலும் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவர்களுக்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உணவு சமைத்து வழங்குகின்றனர். மானாமதுரையில் பர்மா காலனி பகுதியில் பாம்புபிடிக்கும் தொழில் செய்யும் காட்டு நாயக்கர் சமுதாய மக்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர்.
தொடர்ந்து பெய்த மழையால் இவர்கள் வசித்த குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. மேலும் அருகேயுள்ள ஆதனூர் கண்மாய் நிரம்பி தண்ணீர் வெளியேறியதால் காட்டு நாயக்கர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீரின் அளவு ஒவ்வொரு நாளும் அதிகரித்து தற்போது அவர்கள் வசிக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
இதனால் காட்டு நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் இரவு நேரங்களில் அருகிலுள்ள அரசு பள்ளியிலும் பகல் நேரத்தில் தங்களது குடியிருப்புக்கு அருகே உள்ள மேடான பகுதியிலும் தங்கியுள்ளனர்.
தண்ணீர் சூழ்ந்துள்ள தங்களது வீடுகளில் சமைக்க முடியாத சூழ்நிலை உள்ளதால் பர்மா காலனி பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள காட்டு நாயக்கர் சமுதாய மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.