சென்னை விமான நிலையத்தில் ரூ 65.13 லட்சம் மதிப்பிலான தங்கம், சவூதி ரியால் மற்றும் மின்னணு பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடத்தல் குறித்த உளவுத் தகவலின் அடிப்படையில், நேற்று இண்டிகோ விமானம் மூலம் துபையில் இருந்து வந்த இரண்டு பயணிகள் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் வழியில் அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டனர். அவர்களது பைகளை சோதனையிட்டபோது 24 கண்ணாடி குடுவைகளில் 601 கிராம் தங்கம் மரத்துகள்களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதன் மதிப்பு ரூபாய் 25,88,507 ஆகும். ரூ 17,90,907 மதிப்புடைய மின்னணு பொருள்களும் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொரு வழக்கில், பெங்களூரு வருவாய் உளவு இயக்குநரகம் அளித்த தகவலின் அடிப்படையில் ஃபிளை துபை விமானம் மூலம் இன்று துபை செல்லவிருந்த 2 பயணிகள் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அவர்களது பைகளை சோதனையிட்டபோது, ரூ 21.34 லட்சம் மதிப்புடைய சவூதி ரியால்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.