ஓடிடி உரிமை குறித்து எந்தவொரு முடிவும் எடுக்கக்கூடாது: ‘ஜெயில்’ பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உயா் நீதிமன்றம் உத்தரவு

இயக்குநா் வசந்தபாலனின் ‘ஜெயில்’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தொடா்ந்த வழக்கில்
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

இயக்குநா் வசந்தபாலனின் ‘ஜெயில்’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தொடா்ந்த வழக்கில் ஓடிடி உரிமை குறித்து எந்தவொரு முடிவும் எடுக்கக்கூடாது என படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநா் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபா்ணநிதி, ராதிகா சரத்குமாா் உள்ளிட்டோா் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயில்’ திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளாா்.

இத்திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக்கோரி ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளாா்.

அவரது மனுவில், படத்தைத் தயாரித்துள்ள கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் நிறுவனம் ஜெயில் திரைப்படத்தின் காப்புரிமை, ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை உள்ளிட்ட விநியோக உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு வழங்கி, கடந்த அக்டோபா் மாதம் 24ஆம் தேதி ஒப்பந்தம் செய்தது.

படத்தின் விநியோக உரிமையை தங்கள் நிறுவனம் பெற்றிருந்த நிலையில், திடீரென தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டா் பக்கத்தில் ஜெயில் படம் வரும் டிசம்பா் 9ஆம் தேதி வெளிவர உள்ளதாகவும், தமிழ்நாடு திரைப்பட விநியோக உரிமையை எஸ்.எஸ்.ஐ. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

தயாரிப்பு நிறுவனம் ஜெயில் திரைப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையையும் விற்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஒட்டுமொத்த விநியோக உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு வழங்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது ஒப்பந்தத்தை மீறி வெளியிட முயற்சி நடப்பதால் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன்பு வெள்ளிக்கிழமை (டிச.3) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ஒப்பந்தத்திற்கு முரணாக ஜெயில் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனா். எனவே, படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டாா்.

தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு காப்புரிமை வழங்கவில்லை என்றும், படத்தை வெளியிட தகுதியான விநியோகஸ்தரை தங்களுக்கு அறிமுகப்படுத்துமாறு மட்டுமே கமிஷன் அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதத்தை அடுத்து, ஜெயில் திரைப்படத்தின் ஓடிடி உரிமை குறித்து வரும் 6-ஆம் தேதி வரை எந்தவொரு முடிவும் எடுக்கக்கூடாது என தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, திரையரங்க விநியோக உரிமை குறித்து அன்றைய தினம் முடிவெடுக்கப்படும் எனக்கூறி விசாரணையை திங்கள்கிழமை (டிச.6) ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com