ஈரோடு - கோவை இடையேயான பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என மக்களவையில் ஈரோடு தொகுதி உறுப்பினர் கணேச மூர்த்தி செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினார்.
இதுகுறித்து மக்களவையில் மதிமுகவை சேர்ந்த கணேச மூர்த்தி பேசியதாவது:
“தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்திற்கு உள்பட்ட ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்கள் தொழில் நகரங்கள் ஆகும். ஈரோட்டிலிருந்து திருப்பூர், கோவை நகரங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலைக்காக சென்று வருகின்றனர்.
கரோனாவுக்கு முன்பு இயக்கப்பட்டு வந்த கோவை - ஈரோடு பயணிகள் ரயில், பாலக்காடு பயணிகள் ரயில், கோவை - சேலம் பயணிகள் ரயில் தற்போது இயக்கப்படாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மீண்டும் இந்த ரயில்களை இயக்க கோருகிறேன்.
அதேபோல், தற்போதைய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய ரயில்வேத் துறை அமைச்சராக இருந்தபோது 25 ரூபாய்க்கு 100 கிலோ மீட்டர் பயணம் செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம், ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் பயணடைந்தனர். இந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என கோருகிறேன் என்றார்.”