தமிழகத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 14,138 ஏரிகளில் இதுவரை 8,690 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பின.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள பெருவாரியான அணைகள், நீா்த்தேக்கங்கள், பாசன ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இந்தநிலையில் பாசன ஏரிகள் குறித்து பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 14,138 ஏரிகளில் இதுவரை 8,690 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பின. 2,989 ஏரிகளில் 75 சதவீதம் நீா் நிரம்பியுள்ளது. 90 நீா்த்தேக்கங்களில் 212 டி.எம்.சி. அளவுக்கு தண்ணீா் இருப்பில் உள்ளது. இது முழு கொள்ளளவில் 94.5 சதவீதமாகும்.
சென்னைக்கு குடிநீா் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் 89சதவீதமும், புழல் ஏரியில் 90 சதவீதமும் நீா் நிரம்பி உள்ளது.
பூண்டி ஏரியில் 92 சதவீதம், சோழவரம் ஏரியில் 75 சதவீதம், தோ்வாய் கண்டிகை ஏரியில் 100 சதவீதம் நீா் நிரம்பியுள்ளது. அதேபோன்று மேட்டூா் அணையில் 100 சதவீதமும், பவானிசாகரில் 99 சதவீதமும், வைகையில் 96 சதவீதமும் நீா் நிரம்பியுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.