முப்படைத் தளபதி விபின் ராவத் மற்றும் 13 பேருடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வெலிங்டன் ராணுவக் கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து சூலூர் சென்ற விமானப் படை ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் பயணித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 10 பேர் பலி; 4 பேர் காயத்துடன் மீட்பு
இந்நிலையில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக சுகாதாரத்துறை சார்பில் கோவையில் இருந்து 6 சிறப்பு மருத்துவக்குழுக்கள் சூலூர் சென்றுள்ளன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணியளவில் தனி விமானம் மூலமாக கோவை செல்லவிருக்கிறார். இந்நிலையில் விபத்து குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'குன்னூர் அருகே முப்படைத் தளபதி விபின் ராவத் மற்றும் 13 பேருடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
நான் சம்பவ இடத்திற்கு விரைந்தாலும், மீட்புப் பணிகளில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உள்ளூர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்' என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படைத் தளபதி ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைகின்றனர்.
இதையும் படிக்க | ஹெலிகாப்டர் விபத்து நடந்தது எப்படி?