உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் கொண்டு செல்லப்பட்ட சூலூர் விமானப்படை தளம் முன்பாக மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
கோவையிலிருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும்போது ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் புதன்கிழமை பலியாகினர். ராணுவ கேப்டன் வருண் சிங் 80% தீக்காயங்களுடன் உயர்தர சிகிச்சை கருவிகள் உதவியுடன் சிகிச்சையில் உள்ளார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் வெலிங்டன் சதுக்கத்தில் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் தற்போது அங்கிருந்து சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
குன்னூரில் இருந்து உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களை கொண்டு சென்ற 13 ஆம்புலன்ஸ்கள், மேட்டுப்பாளையம் வழியாக சூலூர் விமானப்படைத்தளத்துக்கு மாலை 2.30 மணிக்கு வந்தடைந்தன .
அங்கு கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கந்தசாமி, மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, 13 பேரின் உடல்களும் விமானம் மூலமாக புதுதில்லிக்கு கொண்டு செல்லப்பட்டன.