ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தனியே இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார்.
கடினமான நேரத்தில் மக்கள் அனைவரும் உங்களுடன் துணை நிற்கிறார்கள் என்றும் ஈடுசெய்ய முடியாத இழப்பில் இருந்து மீண்டுவர பலத்தையும், தைரியத்தையும் நீங்கள் பெற வேண்டும் என்றும் கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த 8-12-2021 அன்று நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் 12 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனடியாக அங்கு விரைந்து இந்திய மக்களுடன் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மீட்புப்பணிகளிலும் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதற்கும் மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி உரிய ஏற்பாடுகளை செய்து தந்திருந்தது.
மேலும், இவ்விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு தனித்தனியாக இன்று தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், இந்த கடினமான நேரத்தில் மக்கள் அனைவரும் உங்களுடன் துணை நிற்கிறார்கள் என்றும் இந்த ஈடு செய்ய முடியாத இழப்பிலிருந்து மீண்டு வர பலத்தையும், தைரியத்தையும் நீங்கள் பெற வேண்டும் என தான் விழைவதாகவும் தெரிவித்துள்ளார்.