நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி திருவாரூர் மாவட்ட கிளை சார்பில் நீடாமங்கலம் தாலுகா அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டி வழங்கும் விழா, தஞ்சை மாவட்ட ரெட்கிராஸ் முன்னாள் செயலாளர் கோவி. ராஜ மகேந்திரனுக்கு நினைவஞ்சலி, தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆயுள்கால உறுப்பினர் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சோம.செந்தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார்.
விழாவில் தாலுகா மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி, தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகளை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருவாரூர் மாவட்ட செயலாளர் வரதராஜன் வழங்கினார்.
நீடாமங்கலம் அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி டாக்டர் நவசத்யா ஆக்ஸிஜன் செறிவூட்டியை பெற்றுக் கொண்டார். இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் ஆயுள்கால உறுப்பினர் அன்பு .வே வீரமணி, நீடாமங்கலம் பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் எஸ் செந்தமிழ்ச்செல்வன், உதவும் மனங்கள் அமைப்பு நிறுவனர் எஸ்.எஸ்.குமார், தீயணைப்பு நிலைய அதிகாரி கார்த்திகேயன் மற்றும் திருவாரூர் ரெட்கிராஸ் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ஆயுள்கால உறுப்பினர் நீலன். அசோகன் நன்றி கூறினார்.