
வெ.இறையன்பு
தமிழகத்தில் பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் 2022 ஜனவரி 31 ஆம் தேதிக்குள் அசையா சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய பணியாளர் தேர்வாணைய விதிகளின்படி, ஐஏஎஸ் அதிகாரிகள் ஆண்டுதோறும் தங்களது சொத்து விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன்படி, தமிழகத்தில் பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் 2021 ஆம் ஆண்டில் தாங்கள் வாங்கிய அசையா சொத்து விவரங்களை சமர்ப்பிக்க தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தனித்தனியே அவர் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் பெயரிலோ, குடும்பத்தினர் அல்லது வேறு எவரின் பெயரிலோ வாங்கிய சொத்துகளை வருகிற ஜனவரி 31 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்றும் முறையான காரணமின்றி சொத்து விவரங்களை மறைப்பது கண்டறியப்பட்டால் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.