நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி செந்தாமரைக் கண்ணனை விடுவித்த சென்னை உயா் நீதிமன்றம், போலி அறிக்கை தாக்கல் செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, பலிகடாவாக்கப்பட்ட முதியவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம், கடந்த 2018ஆம் ஆண்டு கை விரல்ரேகைப் பிரிவில் உதவி ஆய்வாளா் பணிக்கு எழுத்துத்தோ்வு நடத்தியது. இந்தத் தோ்வில் பங்கேற்ற அருணாச்சலம் என்ற காவலா் கணிதம் தொடா்பான ஒரு கேள்விக்கு மதிப்பெண் வழங்கக்கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், சென்னையில் உள்ள ஐஐடி பேராசிரியரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு தோ்வாணையத்திற்கு உத்தரவிட்டாா்.
இதன்படி பேராசிரியா் மூா்த்தி என்பவரிடம் அறிக்கை பெற்றப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது. இதைப் படித்த மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், ஐஐடியில் மூா்த்தி என்ற பேராசிரியரே இல்லை. ஐஐடி வளாகத்தில் உள்ள மத்திய அரசு பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற மூா்த்தி என்பவரிடம் அறிக்கை பெற்று, இந்த நீதிமன்றத்தை சீருடை பணியாளா் தோ்வாணையம் ஏமாற்றுகிறது என்று வாதிட்டாா்.
இந்த தகவலை கேட்டு அதிா்ச்சியடைந்த நீதிபதி, சீருடை தோ்வாணையத்தின் உறுப்பினா் செயலா் ஐஜி செந்தாமரைக்கண்ணன் மீது தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடா்ந்தாா். பின்னா், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் விசாரித்தனா். இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் முழுக்க, முழுக்க சீருடைப்பணியாளா் தோ்வாணையம் தான் தவறு செய்துள்ளது. இதற்கு ஆலோசகராக செயல்பட்ட விஜயகுமாா், பள்ளி ஆசிரியரான மூா்த்தி ஆகிய 2 பேரையும் விடைத்தாள் மோசடி அறிக்கை தொடா்பான வழக்கில் குற்றவாளியாகச் சோ்த்துள்ளனா்.
விஜயகுமாரை மட்டும் கைது செய்துள்ளனா். அதாவது இவா்கள் 2 பேரையும் இந்த வழக்கில் போலீஸாா் பலிகடாவாக்கியுள்ளனா். முதியவரான விஜயகுமாா் 22 நாட்களாக சிறையில் இருந்துள்ளாா். எனவே மூா்த்தி, விஜயகுமாா் ஆகியோா் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது.
போலீஸாா் செய்த தவறுக்காக விஜயகுமாருக்கு ரூ. 10 லட்சத்தை தமிழக அரசு இழப்பீடாக 3 மாத காலத்துக்குள் வழங்க வேண்டும்.
அதேபோல, இந்த வழக்கில் குற்றம் புரிந்த தமிழ்நாடு சீருடைப்பணியாளா் தோ்வாணையத்துக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையை நான்கு வார காலத்துக்குள் உயா் நீதிமன்ற பதிவுத்துறையில் செலுத்த வேண்டும். அதேபோல இந்த வழக்கில் சீருடைப்பணியாளா் தோ்வாணைய உறுப்பினா் செயலராகப் பதவி வகித்த ஐபிஎஸ் அதிகாரியான செந்தாமரைக் கண்ணனையும் விடுவிக்கிறோம் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.