பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பண்டிகைக் காலங்களில், கரோனாநோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், உருமாறிய கரோனா – ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும், தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் இன்று (டிச.13) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதன் பிறகு கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஒமைக்ரான் வைரஸ் நோய் பரவி வருவதால், பொது இடங்களில், பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பதன் காரணமாக, நோய்த் தொற்று பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதை பொதுமக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில், கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், பொதுஇடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
மாவட்ட நிருவாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.