வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென தமிழக அரசுத் தரப்பில் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தினருக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு நிறைவேற்றியது. இதற்கு தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்திருந்தார்.
இந்த சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக கடந்த நவம்பர் 1ஆம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு தமிழக அரசுத் தரப்பில் முன்பே வலியுறுத்தப்பட்டது.
விரைவில் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தரப்பில் கூறப்பட்ட நிலையில், இன்னும் விசாரணைக்கு பட்டியலிடாததால், தமிழக அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தின் பதிவாளர் சிராக் பனுசிங்கை நேரில் சந்தித்து இன்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், தலைமை நீதிபதியின் உத்தரவின் பேரில் விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என பதிவாளர் தெரிவித்துள்ளார்.