
அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்: ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
சென்னை: கரோனா அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்ய வேண்டாம், உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக தமிழகம் வந்த 47 வயது நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதுதான் தமிழகத்தின் முதல் ஒமைக்ரான் பாதிப்பு. அந்த நபர் அறிகுறிகள் அற்றவராக இருக்கிறார். அவருக்கு சென்னை கிண்டி கரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் வந்த குடும்பத்தினர் 7 பேருக்கும் எடுக்கப்பட்ட மாதிரியிலும் மரபியல் மாற்றம் உள்ளது. அதனால் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது. 7 பேருமே இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க.. ஒமைக்ரானிலிருந்து மீண்டவர் சொல்வதைக் கேளுங்கள்..
இந்த நிலையில், சென்னையில் மருத்துவத் துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, காங்கோ நாட்டிலிருந்து வந்த ஆரணியைச் சேர்ந்த பெண்ணுக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஆரணி சென்ற பெண்ணுக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறிகள் தெரிய வந்திருப்பதால், அவரது மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தமிழகத்தில் ஏற்கனவே நைஜீரியாவிலிருந்து வந்த ஒரு நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
2 தவணை கரோனா தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டால் உயிர்பலியிலிருந்து தப்பிக்கலாம். ஒமைக்ரான் பாதிப்புக்கு சிகிச்சையளிக்க தமிழகத்தில், 1.11 லட்சம் படுக்கைகள் தயாராக உள்ளன.
தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.