நாமக்கல்: தமிழகம் முழுவதும் குட்கா பொருள்கள் சப்ளை செய்த பெங்களூரு இளைஞரை நாமக்கல் போலீஸார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்ட காவல்துறைக்கு கடந்த 9-ஆம் தேதி அதிகாலை கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருச்செங்கோடு தோக்கவாடி பேருந்து நிறுத்தம் அருகே காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருச்செங்கோட்டில. இருந்து வந்த மாருதி ஆம்னி வேன் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள 270 கிலோ குட்கா பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து குட்கா பொருள்களை பறிமுதல் செய்தும், வாகனத்தில் இருந்த ஈரோடு பவானியைச் சேர்ந்த சதீஸ்குமார், குமாரபாளையத்தைச் சேர்ந்த தினேஷ்குமார், மோகன்ராஜ் மற்றும் பழனிசாமி ஆகியோரரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
நாமக்கல் மாவட்ட தனிப்படையினர்.
மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் கர்நாடகம் மாநிலம், பெங்களூரு சாம்ராஜ் நகரைச் சேர்ந்த முகமது சுகில்(35) என்பவர், தமிழகம் முழுவதும் குட்கா பொருள்கள் விற்பனை செய்யும் முக்கிய சப்ளையாளராக இருப்பது தெரியவந்தது.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகுர் உத்தரவின் பேரில் திருச்செங்கோடு நகர காவல் ஆய்வாளர் செந்தில்குமார், தலைமையிலான தனிப்படையினர் பெங்களூருவுக்கு சென்று சாம்ராஜ் நகரில் முகமது சுகிலை கைது செய்தனர்.
விசாரணையில், தமிழகம் முழுவதும் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய அனுப்பி வந்தது தெரியவந்தது. முக்கிய குற்றவாளியை கைது செய்த தனிப்படையினரை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார். இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகுர் எச்சரிக்கை விடுத்தார்.