காங்கயம்: பிளாஸ்டிக் மாசு இல்லாத தமிழகம் என்னும் முழக்கத்தை முன்னிறுத்தி, விழிப்புணர்வுப் பேரணி காங்கயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு எதிராகப் புறப்பட்ட இந்தப் பேரணியை நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஸ்வரன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
காங்கயத்தில் நடைபெற்ற பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள்.
இதில், காங்கயம் கார்மல் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பாதைகளை ஏந்தி வந்தனர். நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையம், காவல் நிலைய ரவுண்டானா வழியாக வந்து, நகராட்சி அலுவலக வளாகத்தில் பேரணி நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில், காங்கயம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.செந்தில்குமார், மேலாளர் சகுந்தலா, நகராட்சி வருவாய் ஆய்வாளர் செல்வகுமார், கார்மல் பள்ளித் தலைமையாசிரியர் சாந்தி அமலோர், உடற்கல்வி ஆசிரியர் எஸ்.செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.