புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருள்கள் விலைவாசி உயர்வு கண்டித்தும், அதற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் பாதயாத்திரை பேரணி சனிக்கிழமை மேற்கொண்டனர்.
புதுச்சேரி வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகில் இருந்து பாதயாத்திரை பேரணி புறப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் வி. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி, எம்பி வெ. வைத்திலிங்கம், எம்எல்ஏ மு. வைத்தியநாதன், மாநில செயலாளர் சூசைராஜ், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, ஷாஜகான் உள்ளிட்ட நிர்வாகிகள், காங்கிரஸார் திரளாக கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் பேரணி மறைமலை அடிகள் சலை, இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை, காமராஜர் சிலை ஆகிய சந்திப்புகள் வழியாக பேரணியாக சென்று, தலைமை தபால் நிலையத்தில் நிறைவடைந்தது.
இந்த பேரணியில், மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.