கிருஷ்ணகிரி: பாரூர் ஏரியில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்கான பாசன நீரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம் பாரூர் பெரிய ஏரியில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய் மூலம் இரண்டாம் போக பாசனத்திற்காக பாசன நீரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி திறந்து வைத்தார். அப்போது பர்கூர் சட்டபேரவை உறுப்பினர், தே மதியழகன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாரூர் பெரிய ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பாரூர், கோட்டப்பட்டி, அரசம்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி, கீழ்குப்பம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் பயன் பெறுவர்.
பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு பிரதான கால்வாயிலிருந்து வினாடிக்கு 50 கன அடியும், மேற்கு பிரதான கால்வாயிலிருந்து வினாடிக்கு 70 கன அடி வீதம் 135 நாள்களுக்கு, முதல் 5 நாள்களுக்கு பிறகு முறை பாசனம் வைத்து மூன்று நாள்கள் கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டும், நான்கு நாள்கள் மதகை மூடி வைத்தும் இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். மேலும் விவசாயிகள் பொதுப்பணித் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.