அம்மா வளாகம் பெயர் மாற்றத்தை கைவிட வேண்டும்: முதல்வருக்கு அதிமுக வலியுறுத்தல்
அம்மா வளாகம் பெயர் மாற்றத்தை முதல்வர் உடனடியாக கைவிட வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், பேராசிரியர் க. அன்பழகன் நிதித்துறை உட்பட பல்வேறு இலாக்காக்களின் அமைச்சராக இருந்தவர். அவருக்கு அங்கு சிலை வைப்பதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை. அதே சமயத்தில் ‘அம்மா வளாகம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த வளாகத்தின் பெயரை மாற்றி ‘பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை’ என்று வைப்பது நியாயமற்ற செயல்.
ஒரு பெயரை எடுத்துவிட்டு இன்னொரு பெயரை வைப்பது என்பது, ஒருவரை இழிவுபடுத்திவிட்டு இன்னொருவரை புகழ்வது போல் ஆகும்.
இதையும் படிக்க- யு-19 உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு
இது போன்ற செயல் தமிழ்ப் பண்பாட்டிற்கு, தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான செயல், அம்மா தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்லாமல் ஒரு தேசியத் தலைவராக அனைவராலும் கருதப்பட்டார். இப்படிப்பட்ட தலைவரின் பெயரில் அமைந்துள்ள வளாகத்தின் பெயரை மாற்றம் செய்யப்படுகிறது என்று வந்துள்ள செய்தியில் உண்மை இருப்பின் அது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டம். இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
எனவே, ‘அம்மா வளாகம்’ என்ற பெயரை மாற்ரி ‘பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை’ என்று வைப்பதை தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக கைவிட வேண்டும் என்றும் புதியதாக வேறு மாளிகை தமிழ்நாடு அரசால் கட்டப்படும்போது அதற்கு அவர் பெயரைச் சூட்டலாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.