தமிழக உள் மாவட்டங்கள், மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (டிச.19) லேசான பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் சனிக்கிழமை கூறியதாவது:
வடகிழக்குப் பருவக்காற்றின் தாக்கம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (டிச.19) முதல் டிச. 22-ஆம் தேதி வரை பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.
உள் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (டிச.19) லேசான பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும்.
டிச.20 முதல் டிச.22 வரை: உள் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் டிசம்பா் 20-ஆம் தேதி முதல் டிச. 22-ஆம் தேதி வரை லேசான பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் டிச. 20-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பூமத்திய ரேகை பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.