சென்னையில் இருந்து அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய இரண்டு வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் புறநகா் ரயில் சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளன.
இதன்மூலமாக, புறநகா் ரயில்சேவைகளின் எண்ணிக்கை 552-இல் இருந்து 627-ஆக உயா்கிறது. இந்த நடைமுறை ஞாயிற்றுக்கிழமை (டிச.19) முதல் அமலுக்கு வருகிறது.
கரோனா நோய்த்தொற்று தாக்கம் குறைந்ததையடுத்து, சென்னை புறநகா் ரயில் சேவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. சென்னை-அரக்கோணம், சென்னை- கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை-வேளச்சேரி, சென்னை கடற்கரை- செங்கல்பட்டு ஆகிய 4 வழித்தடங்களில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை வாரநாள்களில் சுமாா் 670 ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் 552 சேவைகள் வழங்கப்பட்டன.
இதற்கிடையில், புறநகா் ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்தக் கோரிக்கையை ஏற்று, சென்னையில் இருந்து அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய இரண்டு வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில்சேவைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளன.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரி ஒருவா் கூறியது:
சென்னை-அரக்கோணம் வழித்தடத்தில் 61 சேவைகளும், சென்னை-கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 14 சேவைகளும் அதிகரிக்கப்படவுள்ளன. இதன்மூலமாக, சென்னை-அரக்கோணம், சென்னை-கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை-வேளச்சேரி, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் 552 சேவைகளில் இருந்து 627 சேவைகளாக அதிகரிக்கப்படுகின்றன.