களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே அரசுப் பேருந்தில் முறைகேடாக கேரளத்துக்கு கொண்டு சென்ற ரூ. 70 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்து, பணம் கொண்டுசென்ற வரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாகர்கோவில் - திருவனந்தபுரம் சாலையில் கேரளம் மதுவிலக்கு மற்றும் தமிழ்நாடு மதுவிலக்கு போலீசார் களியக்காவிளையை அடுத்த படந்தாலூமூட்டில் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நாகர்கோவிலிருந்து கேரளம் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஒருவர் தனது பைகளில் ரூ.70 லட்சம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் சென்னை புதுப்பேட்டை லெப்பை தெருவைச் சேர்ந்த கல்லுமொய்தின் என்பவரது மகன் ஆதாம்(45) என்பது தெரியவந்தது
பணத்தை பறிமுதல் செய்த போலீசார், ஆதாமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரளத்தில் நேற்று இண்டு பேர் கொலை செய்யப்பட்ட நிலையில், இன்று 70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்த கொண்டு செல்லப்பட்டதா அல்லது ஹவாலா பணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் களியக்காவிளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.