நெல்லை: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், படிப்படியாக திறக்கப்பட்டு, தற்போது நேரடியாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதையும் படிக்க.. ஒமைக்ரான் பற்றி பிரிட்டனிலிருந்து வந்திருக்கும் நல்ல செய்திகள்
தமிழகத்தில் தற்போது சுழற்சி முறையில் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி, அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
மேலும், பள்ளிகளில் மதிய இடைவேளையின்போது மாணவர்கள் அனைவரும் வெளியே ஒரே நேரத்தில் கூடுவதைத் தவிர்க்க மாற்றுஏற்பாடு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.