கூலி உயர்வு கேட்டு சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில், ராஜபாளையம், புளியங்குடி ஆகிய பகுதிகளில் விசைத்தறி நெசவுத் தொழில் பிரதானத் தொழிலாக உள்ளது. சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இங்கு 25,000-க்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகள் விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இறுதியாக ஒவ்வொரு ஆண்டும் 10% கூலி உயர்வு வழங்க, வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை, தொழிற்சங்கங்கள் என முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சில மாதங்களுக்கு முன்பாக முடிவு எடுக்கப்பட்டது. எனினும், 10% கூலி உயர்வை உரிமையாளர்கள் அமல்படுத்தவில்லை.
இதையடுத்து, பல்வேறு கட்ட போராட்டத்தை முன்னெடுத்து வரும் விசைத்தறி தொழிலாளர்கள், போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 20 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சங்கரன்கோவில் -ராஜபாளையம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் கைவிடப்படாத நிலையில், மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவர்களை காவல்துறையினர் கைது செய்து மண்டபங்களில் அடைத்தனர்.