ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் பலியாகினர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்த ஜெயக்குமார் மகன் தருண்(17). இவர், ஈரோடு அடுத்த வெள்ளோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக தருண் வீட்டிற்குச் சென்று விட்டு நேற்று இரவு கல்லூரி விடுதிக்கு செல்வதற்காக பெருந்துறைக்கு பேருந்தில் வந்தார்.
பின்னர், அவருடன் கல்லூரியில் சிவகாசி மாவட்டம் ஈங்கார் விளக்கு பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் மகன் அபினேஷ்(19) என்பவருடன் நேற்று இரவு பைக்கில் விடுதிக்கு சென்று கொண்டிருந்தார். பைக்கை அபினேஷ் ஓட்டி வந்தார். ஈரோடு-பெருந்துறை ரோடு பவளத்தாம்பாளையம் அருகே வந்தபோது, பைக் அபினேஷின் கட்டுப்பாட்டினை இழந்து, சாலையோரம் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் ரத்த வெள்ளத்தில் அபினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த தருண் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தபோது, அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அபினேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.