செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பாலாற்றில் குளிக்கச்சென்ற சிறுமி உள்பட மூன்று பேர் பரிதாபமாக பலியாகினர். கடந்த இரண்டு நாளாக தேடுதல் பணி நடைபெற்று வந்த நிலையில், சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம் இருங்குன்றப்பள்ளி அருகே பாலாற்றில் கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது தண்ணீரின் வரத்து குறைந்தாலும் ஆற்றில் துணி துவைக்கவோ, குளிக்கவோ மற்றும் புகைப்படம் எடுக்கவோ மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் சனிக்கிழமை கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தை முன்னிட்டு சென்னை திரிசூலம் பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் அச்சிறுப்பாக்கம் மலைமாதா தேவாலயத்திற்கு செல்லும் வழியில் செங்கல்பட்டு இருங்குன்றப்பள்ளி அருகே பாலாற்றில் குளிப்பதற்காக ஓடும் தண்ணீரை பார்த்ததும் உற்சாகத்தில் ஆற்றில் இறங்கியுள்ளனர்.
அனைவரும் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக லியோன்சிங்கராஜா (38)அவரது மகள் 12ஆம் வகுப்பு படித்து வரும் பெர்சி (16), லியோன் சிங்கராஜாவின் அண்ணன் சேகர் என்பவரின் மகன் லெனின்ஸ்டன்(20) உள்ளிட்ட மூவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அடித்துச் செல்லப்பட்ட மூவரும் கிடைக்காததால் தொடர்ந்து இரண்டு நாளாக செங்கல்பட்டு தீயணைப்புத்துறை வீரர்கள் படகு மூலம் மூன்று குழுக்களாக பிரிந்து கடுமையாக தேடியும் சடலங்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வந்த நிலையில் ஒருவழியாக ஒன்றன்பின் ஒன்றாக பெர்ஸி மற்றும் லியோன் சிங்கராஜா உள்ளிட்ட இரண்டு சடலங்களை ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்டனர்.
மூன்றாவதாக சிறுவன் லெனிஸ்டன் சடலத்தை கண்டுபிடிக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வந்த நிலையில் திடீரென சிறுவனின் சடலம் மேலே மிதந்தது. அதன் பிறகு தான் சடலத்தை மீட்டனர்.
மூன்று பேரின் சடலத்தை பெற்றுக் கொண்ட படாளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சடலங்களை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு சடலமாக மீட்டு கரைக்கு கொண்டு வரும்போது உறவினர்கள் கதறி அழுத காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.