
கே.பாலகிருஷ்ணன்
சென்னை: சேதமடையும் நிலையில் உள்ள பழைய குடிசை மாற்றுவாரிய வீடுகளைக் கணக்கெடுத்து இடித்துவிட்டு, புதிய வீடுகளைக் கட்டித் தர வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
திருவொற்றியூா் அருகே 23 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் சரிந்து இடிந்து விழுந்துள்ளது பெரும் அதிா்ச்சியை அளிக்கிறது. இடிந்து விழுந்த 24 குடியிருப்புகளில் வசித்த குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணமும், மாற்று வீடும் வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதுபோன்ற பாதுகாப்பற்ற குடியிருப்புகளில் வசிக்கும் மீதமுள்ள குடும்பங்களுக்கு உடனடியாக அரசு தலையிட்டு நிவாரணம் வழங்கி, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்திட வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள குடியிருப்புகளுக்குப் பதிலாக அதே இடத்தில் புதிய குடியிருப்புகளைக் கட்டித்தர வேண்டும். அதுவரை குடியிருப்போருக்கு மாற்று இடம் வழங்கிட வேண்டும்.
சென்னை நகரிலும் மற்றும் தமிழகம் முழுவதும் நீண்ட காலத்துக்கு முன் கட்டப்பட்டு சேதமடையும் நிலையில் உள்ள அனைத்து வீடுகளையும் கணக்கெடுத்து மாற்று இடம் வழங்கி, அதே இடத்தில் புதிய குடியிருப்புகளை கட்டி அம்மக்களுக்கே ஒப்படைத்திட வேண்டும் என்று கூறியுள்ளாா்.