எந்த சத்துணவு மையத்திலும் கெட்டுப் போன முட்டைகள் வழங்கப்படவில்லை: தமிழக அரசு விளக்கம்
சென்னை: எந்தவொரு சத்துணவு மையத்திலும் கெட்டுப் போன முட்டைகள் வழங்கப்படவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
புழுக்கள் நிறைந்த முட்டைகள் சத்துணவில் விநியோகம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கு பதிலளித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட விளக்கம்:-
முட்டை விநியோகம் செய்வோரிடம் இருந்து சத்துணவு மையங்களுக்கு வாரத்துக்கு ஒரு முறை முட்டைகள் பெறப்படுகின்றன. அவ்வாறு முட்டைகள் விநியோகம் செய்யப்படும் போது, அவற்றின் தரம், அளவு மற்றும் எடையை நன்கு பரிசோதித்து நல்ல நிலையில் உள்ள முட்டைகளையே மைய பொறுப்பாளா்கள் பெறுகின்றனா். இவ்வாறு முட்டைகளைப் பெறும் சமயத்திலோ அல்லது ஒரு வார காலத்துக்குள்ளாகவோ பெறப்பட்ட முட்டைகளில் சேதமோ அல்லது புழுக்களோ இருப்பது கண்டறியப்பட்டால் அவை தனியாக வைக்கப்படுகின்றன.
வாரத்துக்கு ஒரு முறை முட்டைகள் பெறப்பட்டாலும் ஒவ்வொரு நாளும் அவற்றை குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக எடுக்கும் போது அவை தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு தரம் உறுதி செய்யப்படுகிறது. அதன் பிறகே முட்டைகள் வேக வைக்கப்படுகின்றன. சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை உள்பட உணவு தரமான முறையில் வழங்கப்படுவது பல நிலைகளிலும் உறுதி செய்யப்பட்ட பிறகே வழங்கப்படுகிறது. எந்தவொரு சத்துணவு மையத்திலும், கெட்டுப் போன அல்லது புழுக்களுடன் உள்ள முட்டைகளோ, தரமற்ற முட்டைகளோ குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை.