சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதால் கட்டுப்பாடுகளை அதிகரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் ஒமைக்ரான் எனும் புதிய வகை கரோனா வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என விதிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதும் ஒமைக்ரான் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து கரோனா பரவலைக் கண்காணித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசும் அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை அதிகரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி பரிசோதனைகளை அதிகப்படுத்துதல், தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்துதல், தொற்றுக்கு ஆளானவர்களின் தொடர்புகளையும் பரிசோதனை செய்து தனிமைப்படுத்தல், பரவலைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் டிசம்பர் தொடக்கத்தில் 1,088 ஆக இருந்த கரோனா பாதிப்பு தற்போது 1,720 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.