இன்று இரவு மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பேரிடர் மேலாண்மை, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று காலை முதல் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. அம்பத்தூர், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம், கொருக்குப்பேட்டை, வில்லைவாக்கம், அயனாவரம், ஐசிஎஃப் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
எம்.ஆர்.சி நகர் 21 செ.மீ., நுங்கம்பாக்கம், ஒய்எம்சிஏ நந்தனம் - தலா 12 செ.மீ., மீனம்பாக்கம் 10 செ.மீ., அண்ணா பல்கலை. 8 மழைப்பதிவாகி உள்ளது. கனமழையால் பல்வேறு பகுதிகளின் சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் கெங்குரெட்டி, துரைசாமி, ஆர்.பி.ஐ. ஆகிய சுரங்கப்பாதைகளும் மூடப்பட்டுள்ளன.
இதனிடையே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணம் இந்த நான்கு மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று இரவு மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பேரிடர் மேலாண்மை, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேப்பாக்கம் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இன்று இரவு மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். இரவு தங்கும் மையங்களை ஏற்பாடு செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.