திருத்துறைப்பூண்டி: நம்மாழ்வார் நினைவு நாளில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் தமிழகத்தை முழு இயற்கை விவசாய மாநிலமாக மாற்றவும் அனைவரும் இணைந்து பாடுபடுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம் ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் சார்பில் நம்மாழ்வார் அவர்களின் எட்டாவது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நம்மாழ்வார் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் தமிழகத்தை முழு இயற்கை விவசாய மாநிலமாக மாற்றவும் அனைவரும் இணைந்து பாடுபடுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய உயர்மட்டக்குழு உறுப்பினர் கரிகாலன் தலைமையேற்று பேசியதாவது அய்யா நம்மாழ்வார் கூறியதுபோல் "விவசாயம் என்பது வியாபாரம் அல்ல வாழ்க்கை முறை " என்பதற்கிணங்க நாம் நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றி இயற்கையோடு இணைந்து பாரம்பரிய இயற்கை வேளாண்மை போன்ற பாரம்பரியம் சார்ந்த விஷயங்களை நாமும் முன்னெடுப்பதுடன் நமது இளைய தலைமுறையிடத்தும் கொண்டு செல்வதும் நம்முடைய தலையாய கடைமையாகும் என்றார்.
மேலும் நிகழ்ச்சியில் ஆதிரெங்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகரன், கட்டிமேடு ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன், கொறுக்கை ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன், ஆதிரெங்கம் ஒன்றியக்குழு உறுப்பினர் சரஸ்வதி ராமகிருஷ்ணன், ஆதிரெங்கம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பொற்செல்வி செல்லபாண்டியன், பாலம் செந்தில்குமார், முன்னோடி இயற்கை விவசாயி ஓவர்குடி பரமசிவம், விவசாயி முருகையன் மற்றும் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய கள ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ராஜிவ் நன்றி கூறினார் .
இதையும் படிக்க | ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் சமூக நல அலுவலகத்தில் வேலை வேண்டுமா?