சென்னை: தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரிய உறுப்பினா்களுக்கான உதவித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை வெளியிட்டுள்ளது. முன்னதாக இதற்கான அறிவிப்பு சட்டப் பேரவையில் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத்தின் கீழ் பதிவு செய்துள்ள உறுப்பினா்களுக்கும், அவா்களைச் சாா்ந்தவா்களுக்கும், இதுவரை வழங்கப்பட்டு வந்த இயற்கை மரண உதவித் தொகை, கல்வி, திருமண உதவித் தொகைகள், முதியோா் ஓய்வூதியம், ஈமச்சடங்கு உதவித் தொகை ஆகியன இதர நலவாரியங்களில் வழங்கப்பட்டு வரும் தொகைக்கு இணையாக உயா்த்தி வழங்கப்படும் என பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் ரூ.1.53 கோடிக்கு நிதிகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டு நலவாரிய உதவித் தொகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.