2022 ஆண்டில் புதிய இலக்குகளையும் குறிக்கோள்களையும் நோக்கி பயணிக்க வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழகம்,தெலுங்கானா, புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 2022 ஆண்டில் புதிய இலக்குகளையும் குறிக்கோள்களையும் நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.
இந்தியாவின் ஆளுமை, ஒன்றுபட்ட உணர்வு, உலகிற்கு தலைமை ஏற்கும் தகுதியை ஆகியவற்றை உலகிற்கு பறைசாற்றும் ஆண்டாக 2021 அமைந்தது. தொலைநோக்கு பார்வை கொண்டு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் “ஆத்ம நிர்பார் பாரத்“ திட்டத்தின்கீழ் உள்நாட்டிலேயே தயாரான கரோனா தடுப்பூசிகள் இந்தியாவின் விஞ்ஞான அறிவை உலகிற்கு பறைசாற்றின.
தடுப்பூசி இயக்கம் மக்கள் இயக்கமாக வளர்ந்து உலக நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது. சுமார் 143 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது. உலகில் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்திய நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் நாட்டின் ஒற்றுமைக்காகவும் ஒன்றுபட்ட வளர்ச்சிக்காகவும் நம்மை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.
கரோனா பெருந்தொற்று இன்னும் முழுமையாக விலகாத நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விழாக்களையும் பண்டிகைகளையும் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.