திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே, சாய்ந்த நிலையிலிருந்த மின் கம்பத்தை, சரி செய்யக் கோரி சனிக்கிழமை (30ஆம் தேதி ) தினமணி இணையதளத்தில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
மரக்கடையில் ஸ்ரீ மாரியம்மன் கோயில் மற்றும் அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு, மரக்கடை, கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பாண்டுக்குடி, கோரையாறு, மேல் கொண்டாழி, அதங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு குலதெய்வமாகவும் விளங்குகின்றது.
இக்கோயிலில், சித்திரை, வைகாசி,ஆடி, ஆவணி மாதங்கள் உட்பட ஆண்டுதோறும் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இச்சமயங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல ஊர்களிலிருந்தும் வருகிறார்கள். மாரியம்மன் கோயில் குளத்தை ஒட்டினார் போல், உள்ள மின் கம்பம் பல ஆண்டுகளாக சாய்ந்த நிலையிலும், அருகில் உள்ள குளத்தின் தண்ணீரைத் தொட்டு விடும் தூரத்தில் மின் கம்பிகள் தவழ்ந்த படியும் சென்றன.
இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்தன. இச்செய்தியை தினமணி இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டன. தகவலறிந்த மின்சார வாரிய உயரதிகாரியின் ஆலோசனைப்படி, ஞாயிற்றுக்கிழமை காலை, சாய்ந்த மின் கம்பத்தை நிமிர்த்தி வைத்து, மின் கம்பத்திற்கு கொடுக்கப்பட்ட முட்டுக்கட்டையையும் அகற்றப்பட்டது.
மேலும், தண்ணீரில் தவழும் அளவிற்கு தாழ்வாகச் சென்ற மின் கம்பிகளையும் உயர்த்திக் கட்டப்பட்டன. கோரிக்கைகளை நிறைவேற்றிய மின்சார வாரியத்திற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து, பாராட்டினர்.