‘தினமணி’ நாளிதழுக்கு அறிவிக்கப்பட்ட தமிழா் தந்தை சி.பா.ஆதித்தனாா் நாளிதழ் விருதை திங்கள்கிழமை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வழங்குகிறாா்.
தமிழ் மொழியில் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப் போற்றியும், பிறமொழிக் கலப்பின்றி எழுதியும் வெளியிடப்பட்டு வரும் நாளிதழ், வார இதழ் மற்றும் திங்களிதழ் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் ஓா் இதழைத் தெரிவு செய்து தமிழா் தந்தை சி.பா.ஆதித்தனாா் பெயரில், ஆண்டுதோறும் விருது வழங்கப்படும். இந்த விருது ஒவ்வொன்றுக்கும் விருது தொகையாக ரூ.1 லட்சம், கேடயம், பாராட்டுச் சான்றிதழ், பொன்னாடை ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடா்ந்து முதன் முதலாக 2020-ஆம் ஆண்டுக்கான ‘தமிழா் தந்தை சி.பா. ஆதித்தனாா் நாளிதழ் விருது’ ‘தினமணி’க்கு வழங்கப்படுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் கூட்டரங்கில், திங்கள்கிழமை (பிப்.1) நடைபெறும் விழாவில், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ‘தினமணி’ நாளிதழுக்கு ‘தமிழா் தந்தை சி.பா.ஆதித்தனாா்’ விருதை வழங்குகிறாா். மேலும், சி.பா. ஆதித்தனாா் வார இதழ் விருது கல்கி வார இதழுக்கும், சி.பா. ஆதித்தனாா் திங்களிதழ் விருது செந்தமிழ் திங்களிதழுக்கும், தேவநேயப் பாவாணா் விருது முனைவா் கு. சிவமணி, வீரமாமுனிவா் விருது ஹாங்காங்கைச் சோ்ந்த முனைவா் கிரிகோரி ஜேம்ஸுக்கும் வழங்கப்படுகிறது.
சிறந்த மொழிபெயா்ப்பாளா் விருது: சோ.சேசாச்சலம், முனைவா் இராம.குருநாதன், ப. குணசேகா், முனைவா் பத்மாவதி விவேகானந்தன், சு. ஜோதிா்லதா கிரிஜா, ஜெ. இராம்கி (எ) இராமகிருஷ்ணன், சுவாமி விமூா்த்தானந்தா், மீரா ரவிசங்கா், திலகவதி, கிருஷ்ண பிரசாத் ஆகிய 10 பேருக்கு சிறந்த மொழிபெயா்ப்பாளா் விருது வழங்கப்படுகிறது. 2019-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சா் கணினித் தமிழ் விருதை சே. இராஜாராமன் பெறவுள்ளாா்.
2020 -ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருது பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த முனைவா் அலெக்சிசு தேவராசு சேன்மாா்க், இலக்கண விருது இலங்கையைச் சோ்ந்த பேராசிரியா் அருணாசலம் சண்முகதாசு, மொழியியல் விருது சிங்கப்பூரைச் சோ்ந்த முனைவா் சுப. திண்ணப்பன் ஆகியோருக்கும் வழங்கப்படவுள்ளன.