மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தார்சாலை அமைக்கபட்ட சில மாதங்களிலேயே சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மானாமதுரை ஒன்றியம் சின்ன கண்ணனூர் கிராமம், மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இக்கிராமத்தைக் கடந்து மாவட்ட எல்லையான கிழவி குளம் கிராமம் வரை கிராமப்புற நெடுஞ்சாலைத்துறை மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது.
தற்போது இந்த சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு பயனற்ற வகையில் உள்ளது. இது குறித்து சின்ன கண்ணனூர் கிராமத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துராமலிங்கம் கூறியதாவது, கிராமப்புற நெடுஞ்சாலை துறை மூலம் பல லட்சம் மதிப்பீட்டில் மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சின்னகண்ணனூர் வழியாக கிழவி குளம் கிராமத்திற்கு எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டது.
சாலையை அகலப்படுத்தாமல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தச் சாலையை கடந்து செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டதால் பல இடங்களில் சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக மழைநீர் தேங்கி, குளம் போல் காட்சி அளிக்கிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் கிராமப்புற நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சின்ன கண்ணனூர் வழியாக கிழவி குளம் வரை சேதமடைந்துள்ள தார் சாலையை சீரமைத்து அகலப்படுத்த வேண்டும் என்றார்.