வாழப்பாடி சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை வழிபாடு
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி சாய்பாபா கோவில், இன்று வியாழக்கிழமை சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வாழப்பாடியில் மன்னாயக்கன்பட்டி, அபர்ணா ஓம் மலைக்குன்று அடிவாரத்தில், இயற்கையான சூழலில் தியான மண்டபத்துடன் ஷீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவரான சாய்பாபாவிற்கு வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று வருகிறது.
இன்று வியாழக்கிழமை கரோனா பெருந்தொற்று நீங்கி, மக்கள் நலவாழ்வு பெற வேண்டி, சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் சமூக இடைவெளியுடன் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனர். மலர் மாலை அலங்காரத்தில் சாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை, சாய்பாபா கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் ஜவஹர், மாதேஸ்வரி, அரசவர்மன் மற்றும் விழாக்குழுவினர் விஜிபிரியா, இளையரசன், விக்னேஷ், ரமேஷ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.