சீர்காழி: சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக ரூபாய் ஒரு கோடியே 15 லட்சம் மதிப்பில் வகுப்பறை கட்டடங்கள் கட்ட பூமிபூஜை நடைபெற்றது.
ஆர்.எம்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் கட்டப்படவுள்ள புதிய கட்டட பூமி பூஜைக்கு சீர்காழி மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராமன் தலைமை வகித்தார், பள்ளி தலைமையாசிரியர் தமிழரசி, உதவி தலைமை ஆசிரியர் கோவி. நடராஜன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் நற்குணன், சிவக்குமார், சந்திரசேகரன், பேரூர் கழக செயலாளர் ரவி, ஜெ பேரவை செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சீர்காழி எம்எல்ஏ பிவி பாரதி கலந்து கொண்டு புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி பேசினார். இந்தப் புதிய கட்டடத்தில் இரண்டு சிறப்பு வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக்கூடம், நூலகம், கணினி அறை, மாணவ மாணவிகளுக்கு தனித்தனி கழிவறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட உள்ளது.
இவ்விழாவில் மாவட்ட மீனவர் அணி செயலாளர் நாகரத்தினம், மாவட்ட பிரதிநிதி ராமையன், பொறியாளர் ரமேஷ் பாலாஜி, வக்கீல் பாலாஜி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.