உற்சாகத்துடன் தொடங்கிய முள்ளுக்குறிச்சி ஜல்லிக்கட்டு: அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர் 

முள்ளுக்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் பி. தங்கமணி, டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 
உற்சாகத்துடன் தொடங்கிய முள்ளுக்குறிச்சி ஜல்லிக்கட்டு: அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர் 


ராசிபுரம்: முள்ளுக்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் பி. தங்கமணி, டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் முறையாக  ஜல்லிக்கட்டு போட்டி, ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி முள்ளுக்குறிச்சியில் தொடங்கியது. 

காலை 8.01 மணிக்கு மாவட்ட ஆட்சியர் க.மெகராஜ் முன்னிலையில்  உறுதிமொழி வாசிக்கப்பட்டது. அனைவரும் உறுதிமொழி ஏற்றதும் போட்டி தொடங்கியது. அமைச்சர்கள் பி. தங்கமணி, டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன்பின்னர் மற்ற காளைகள் ஒவ்வொன்றாக களத்தில் இறக்கப்பட்டன. 

வாடிவாசல் வழியாக சீறிப் பாயும் காளைகளின் திமிலை மாடுபிடி வீரர்கள் பிடித்து காளைகளை அடக்க முற்பட்ட காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. பார்வையாளர்கள் சுற்றி நின்று, வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

இந்த ஆண்டு தான் முதன்முறையாக ராசிபுரம் தொகுதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. கரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன், அரசு வகுத்து தந்துள்ள விதிகளின்படி ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

இந்த போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்கள், மாடுகளின் உரிமையாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, கரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே போட்டிக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் 720 காளைகள் களமிறக்கப்படடனர். 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமான பார்வையாளர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மாடுபிடி வீரர்களுக்கு களத்தில் காயம் ஏற்படக் கூடாது என்பதற்காக தரையில் வைக்கோல்கள் பரப்பப்பட்டருந்தன. சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டிருந்தன.  இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. முடிவில் பங்கேற்ற மாடுபிடி வீரர்களுக்கும் சிறந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com