கம்பம்: தேனி மாவட்டத்தில் கரும்புள்ளி என பெயர் பெற்ற கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி முன்மாதிரியான கிராமமாக விளங்க, காவல்துறை முழு ஒத்துழைப்பு தரும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி பேசினார்.
தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றியம் கருநாக்கமுத்தன்பட்டியில் சனிக்கிழமை இரவு முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவில் கலந்துகொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய்சரண் தேஜஸ்வி பேசும்போது, பல்வேறு குற்ற நிகழ்வுகள் நடந்த கருநாக்கமுத்தன்பட்டியில், முன்னாள் மாணவர் சங்கத்தினர் மற்றும் ராணுவ வீரர்கள், அரசு ஊழியர்கள் கொண்ட அமைப்பு கரும்புள்ளி கிராமம் என்ற பெயரை மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளனர். அதற்கு காவல்துறை முழு ஒத்துழைப்பு தரும்.
தேனி மாவட்டத்திலேயே முன்மாதிரியான கிராமமாக விளங்குவதற்கு முழு ஒத்துழைப்பு தரப்படும் என்று பேசினார்.
விழாவில் ஊரின் முக்கிய இடங்களில், 31 கண்காணிப்பு கேமராக்களை திறந்து வைத்தும், பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர், ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் நா.சின்னக்கண்ணு, காவல் ஆய்வாளர் க.முத்துமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர் சங்க செயலாளர் அன்பழகன் நன்றி கூறினார்.