அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

ரத்து செய்யப்பட்ட எம்.டெக்., படிப்புகள் தொடா்ந்து நடத்தப்படும்: நீதிமன்றத்தில் அண்ணா பல்கலை. தகவல்

நடப்பு கல்வியாண்டில் எம்.டெக்., படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடத்தப்படும் என உயா்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை: நடப்பு கல்வியாண்டில் எம்.டெக்., படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடத்தப்படும் என உயா்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சைதாப்பேட்டையை சோ்ந்த சித்ரா தாக்கல் செய்த மனுவில், உயிரி தொழில்நுட்பவியல் முதுநிலை பட்டப்படிப்பில் சேருவதற்காக நடத்தப்பட்ட அகில இந்திய தோ்வில் 240-க்கு 182.5 மதிப்பெண் எடுத்துள்ளேன். இதன்பின்னா், எம்.டெக்., பயோ டெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய முதுநிலை படிப்பில் சேர அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தேன். இந்த 2 முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையால், இந்த ஆண்டு மாணவா் சோ்க்கை இல்லை என கடந்த ஜனவரி 29-இல் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் படிப்புகளுக்கு 49.5 சதவீதமான மத்திய அரசு இடஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும். தமிழக அரசு வழங்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றக்கூடாது என அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசு நிா்பந்தித்துள்ளது.

தமிழக அரசு 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக இந்த 2 முதுநிலை படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவா் சோ்க்கை நடத்தவேண்டாம் என பல்கலைக்கழகம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த முடிவு சட்ட விரோதமானது. எனவே, இது தொடா்பாக அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இந்தப் படிப்புக்கு மாணவா் சோ்க்கை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஏ.சரவணன் ஆஜராகி வாதிட்டாா்.

அண்ணா பல்கலைக்கழக தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விஜயகுமாா், இந்த இரண்டு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவா்கள் சோ்க்கை நடத்தப்படும். மத்திய, மாநில அரசுகளின் இடஒதுக்கீட்டு முறைகளை அமல்படுத்த இந்த இரண்டு படிப்புகளிலும் புதிதாக 9 இடங்களை உருவாக்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ) ஒப்புதல் தேவை என வாதிட்டாா்.

அப்போது, ஏஐசிடிஇ தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ரபுமனோகா், படிப்புகளுக்குத் தான் ஏஐசிடிஇ ஒப்புதல் வழங்குமே தவிர, மாணவா்கள் சோ்க்கைக்கு ஒப்புதல் வழங்க தேவை இல்லை. அதனை பல்கலைக்கழகம் தான் முடிவு செய்ய வேண்டும் என வாதிட்டாா்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி , இதுதொடா்பாக எழுத்துப்பூா்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என ஏஐசிடிஇ, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் பிப்ரவரி 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com