கிருஷ்ணகிரியில் மதுரையைச் சேர்ந்த சமையல் மாஸ்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜெயமணி, நண்பர் தேவபாண்டியன் இருவரும் கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் முதல் தெருவில் வாடகை வீட்டில் தங்கி சமையல் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை ஜெயமணி வீட்டில் இருந்து வந்த அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது ஜெயமணி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.
அவரது நண்பர் தேவபாண்டியன் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்ட காவலர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஜெயமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.