திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டி புனித வியாகுல மாதா ஆலய திடலில், மாபெரும் ஜல்லிக்கட்டு விழா தொடங்கியது.
கோவில் காளைகள் முதலில் அவிழ்க்கப்பட்டுள்ளது. 600-க்கு மேற்பட்ட காளைகளும், 300-க்கு மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் களம் காணும் விழாவினை வருவாய் வட்டாட்சியர் லஜபதிராஜ், காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.பிருந்தா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
சீறிபாய்ந்து வரும் காளைகளின் திமிலை பிடித்து தழுவும் காளையர்கள்.
நிகழ்ச்சிக்கு தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான ப.குமார், சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சந்திரசேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.
கோவில் காளைகளை தொடர்ந்து, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மணப்பாறை சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் குவிந்திருந்த காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியே திமிறியபடி சீறிபாய்ந்தது.
சீறிபாய்ந்து வரும் காளை
சீறிபாய்ந்து வரும் காளைகளின் திமில் பிடித்து காளையர்களை தழுவிய காட்சி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது. சில முரட்டுக்காளைகள் களத்தில் வீரர்களை கலங்கடித்த நிலையில் நின்று விளையாடியது. சில காளையர்கள் தொட்டு கூட பார்க்க முடியாதபடி சீறிபாய்ந்தது.
காளைகளை அடங்கிய வீரர்களுக்கு ஜல்லிக்கட்டி காளைகள், வெள்ளிக்காசு, ரொக்கம், சைக்கிள், பீரோ, கட்டில், பாத்திரங்கள் என பரிசுகள் வழங்கப்பட்டது. வீரர்களின் கைகளில் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.